புரட்சிப்பாவலர் தமிழ்ஒளி "கவிமலர்" இதழில் 1946 ஆம் ஆண்டு எழுதிய கவிதை
வான்கடல் தோன்றிடும்
முத்துக்களோ! - ஏழை
வாழும் குடிசையின்
பொத்தல்களோ!
மாநில மீதில்
உழைப்பவர்கள் - உடல்
வாய்த்த தழும்புக
ளோ அவைகள்?
செந்தமிழ் நாட்டினர்
கண்களெல்லாம் - அங்குச்
சேர்ந்து துடித்துக்
கிடந்தனவோ?
சொந்த உரிமை
இழந்திருக்கும் - பெண்கள்
சோக உணர்ச்சிச்
சிதறல்களோ?
இரவெனும் வறுமையின்
கந்தல் உடை - தனில்
எண்ணற்ற கண்களோ
விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே
வாடுபவர் - கண்ணீர்
அருவித் துளிகளோ
வான்குன்றிலே?
காலம் எழுதும்
எழுத்துக்களோ - பிச்சைக்
காரர் இதயத்தின்
விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின்
கோட்டையிலே - மின்னல்
நெளிவை இறைத்திட்ட
அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம்
வாட்டிடினும் - இருள்
வேலிகட்டி யிங்கு
வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர்
எண்ணமெல்லாம் - அங்குப்
பொங்கிக் குமுறி
இறைத்தனவோ?
No comments:
Post a Comment